ஞாயிறு, 17 அக்டோபர், 2021

வஞ்சகமான வலை (ஆதி. 30:36)

  வஞ்சகமான வலை



தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான். (ஆதி. 30:36)

தந்திரமாக மனிதர்கள் தரையில் விரிக்கும் வலைகளுக்கும் நம்மைத் தப்பித்துக்கொள்ளச் செய்பவர் ஆண்டவர். துரத்திவிட்டதால் யாக்கோபு தூரத்திலிருந்தாலும், ஆசீர்வாதங்கள் மாத்திரம் எப்படியாவது தன் வசத்தில் வந்துசேர்ந்துவிடவேண்டும் என்பதில் குறியாயிருந்தான் லாபான். என்றபோதிலும், அதற்காக சம்பளம் என்ற பெயரில், யாக்கோபினுடையதிலிருந்தும் தன்னுடையதை எடுத்துக்கொண்டு, 'வெறுங்கையாய்' யாக்கோபை அனுப்பிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு, வஞ்சகமாக லாபான் வகுத்த வழிமுறைகளிலிருந்தும் கர்த்தர் யாக்கோபைக் காப்பாற்றினார். 

லாபானுடைய ஆடுகள் அனைத்தும் லாபானுடைய குமாரர்களுடைய கரங்களில் கொடுக்கப்பட்டுவிட்டது ஆதி. 30:35,36). யாக்கோபுடைய ஆடுகள் மாத்திரமே யாக்கோபின் வசத்தில் இருக்கின்றன; நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட ;டும் (ஆதி 30:32)என்று சொல்லுகின்றான் யாக்கோபு. மேலும், அப ;படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் (ஆதி 30:33) என்றும் கூறுகின்றான் யாக்கோபு. 

அதுமாத்திரமல்ல, அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாணத்தூரத்தில் இருக்கும்படி வைத்தான் (ஆதி 30:35,36) அப்படியென்றால், யாக்கோபின் ஆடுகள் மாத்திரமே யாக்கோபோடு கூட இருந்தன என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறதே; லாபானின் ஆடுகள் எதுவும் யாக்கோபின் வசத்தில் இருந்திக்க வாய்ப்பில்லை; அப்படியென்றால், 'லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்' (ஆதி. 30:36) என்று சுட்டிக்காட்டப்படுவை எவை? 

ஒன்றாயிருக்கும்போது, 'உம்முடைய மந்தை' (ஆதி 30:31) என்று யாக்கோபு சுட்டிக ;காட்டினது உண்மையே; என்றாலும், லாபானுடைய ஆடுகளும், யாக்கோபினுடைய ஆடுகளும் தனித்தனியே பிரிக்கப்பட்டு, லாபானுடைய ஆடுகள் லாபானின் குமாரர்கள் வசத்திலும், யாக்கோபின் ஆடுகள் யாக்கோபின் வசத்திலும் இருந்தபோது, 'லாபானின் மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான்' என்பது எதைச் சுட்டிக்காட்டுகின்றது? தன்னுடைய ஆடுகளை தனியே பிரித்து குமாரர்களிடத்தில் ஒப்படைத்துவிட்டு, 'உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன்' (ஆதி 30:31) என்று யாக்கோபு கூறுவது, லாபானின் வஞ்சகத்தில் மீண்டும் யாக்கோபு சிக்கிக்கொண்டதையும், லாபானினால் மீண்டும் ஏமாற்றப்படவிருந்ததையுமே சுட்டிக்காட்டுகின்றது; எனினும், கர்த்தர் காப்பாற்றினார். 

யாக்கோபுடைய ஆடுகளே அந்த மற்ற ஆடுகள், யாக்கோபுடைய வெள்ளாடுகள், புள்ளியும் வரியுமில்லாத குட்டிகளைப் போட்டால், யாக்கோபின் செம்மறியாடுகள் கறுப்பான குட்டிகளைப் போட்டால் அது லாபானுடையது என்பதையே நாம் இங்கு விளங்கிக்கொள்ள முடியும். உன்னுடையதிலிருந்து எனக்கு ஆசீர்வாதம் மட்டும் வரட்டும் என்ற நிலையிலேயே யாக்கோபை வைத்திருந்தான் லாபான். யாக்கோபு புறப்பட்டுச் சென்றபோதிலும், லாபானுடைய ஆடுகளில் ஒன்றும் யாக்கோபின் வசத்தில் இருக்கவில்லையே. 

இன்றும், பிறருடைய பிரயாசங்களிலிருந்து, ஆசீர்வாதத்தை மாத்திரம் வாங்கிக்கொள்ள விரும்பும் கூட்டத்தினர் உண்டு. 'கர்த்தருக்கு காணிக்கையினைக்' கொடுத்தாலும், கண்களையோ அவரிடத்திலிருந்து வரும் 'ஆசீர்வாதங்களின் மேலேயே' வைத்துக்கொண்டிருக்கும் மக்கள் அநேகர். தனக்குரியதை தன்வசத்தில் பிரித்துவைத்துக்கொண்டு, பிறரிடத்திலிருப்பதிலிருந்தும் தனக்கென ஓர் பங்கை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு கர்த்தர் எதிரியே. 

சனி, 16 அக்டோபர், 2021

வெறுமையா? வெற்றியா? (ஆதி 31:9)

 வெறுமையா? வெற்றியா?



இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார். (ஆதி 31:9)


அழைப்பு பெற்ற மனிதர்களுக்கு விரோதமாகப் போராடும் மனிதர்கள் ஒருபோதும் வெற்றிபெறுவதில்லை. தன் வீட்டிற்கு வந்த யாக்கோபின் மூலமாக அநேக ஆசீர்வாதங்களை லாபான் தனது வாழ்க்கையில் பெற்றனுபவித்துக்கொண்டுவந்தாலும், கொடுக்கவேண்டியவைகளை யாக்கோபுக்கு கொடுத்துவிடவோ மனதற்றவனாகவே காணப்பட்டான் லாபான். என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் (ஆதி 31:42) என்றே லாபானைப் பார்த்துச் சொல்லுகின்றான் யாக்கோபு. வெறுங்கையாய் யாக்கோபை அனுப்பிவிட லாபான் முயற்சித்தபோதிலும், வெற்றி கிடைக்காததற்குக் காரணம், கர்த்தருடைய கரம் யாக்கோபோடு கூட இருந்ததே.  

எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் (ஆதி 31:1) லாபானுடைய குமாரர் சொல்லும் வார்த்தைகளை யாக்கோபு கேட்டபோதிலும், என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத்தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும் (ஆதி 31:37) என்று யாக்கோபு சொன்னபோதிலும், தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார் (ஆதி 31:9) என்பதை தைரியமாகச் சுட்டிக்காட்ட யாக்கோபு தவறவில்லை. மேலும், தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது (ஆதி. 31:16) என்றே லேயாளும், ராகேலும் கூறுகின்றனர். அத்துடன், லாபானின் குமாரர்களும், 'தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான்' (ஆதி 31:1) என்றே சொல்லுகின்றனர். யாக்கோபு எடுத்திருந்தால் அது 'திருடு'; ஆனால், தேவன் எடுத்துக்கொடுத்திருந்ததால் அது யாக்கோபின் வாழ்க்கையில் ஆசீர்வாதமாகவே அளக்கப்பட்டது.  பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள் (ரோம 12:19) என்று வாசிக்கின்றோமே. நாம் பழிவாங்க முயற்சித்தால், அது பாவமாகவே கணக்கிடப்படும்; ஆனால், பழிவாங்காமல் தேவகரத்தில் விட்டுவிட்டால், 'நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்' (ஆதி 50:20) என்ற வார்த்தை நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறும்.

  இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை. பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன். இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர் (ஆதி 31:38-41) என்று யாக்கோபு லாபானிடத்தில் சொன்னதைப்போல, தங்கள் தலைவர்களைப் பார்த்து சொல்லும் ஊழியர்கள் இன்றும் உண்டு.  

மனிதர்களால் பாதிக்கப்பட்டு, பகைக்கப்பட்டு, தேவ அழைப்பினைப் பெற்று பிரிந்துசெல்லும் மனிதர்களுக்கு, தேவனே ஆத்துமாக்களை அள்ளித் தருகிறார். எனினும், மனிதர்களுடைய பார்வைக்கோ ஒருவேளை அவை 'திருடப்பட்டவைகளைப் போல' காட்சியளிக்கக்கூடும். எனினும், அழைக்கப்பட்ட இடத்திலிருந்து நாம் அகன்று சென்றுவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டியது அவசியம். அழைக்கப்பட்ட இடத்திலிருந்து நாம் அகன்று சென்றால், ஆத்துமாக்களின்றி வெறுமையாகவே வாழ நேரிடும். (யோவான் 21:3)


வெள்ளி, 15 அக்டோபர், 2021

பாசமா? பாகமா? (ஆதி 35:28,29)

பாசமா? பாகமா?



ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற் றெண்பது வருஷம் ஜீவித்திருந்து,  பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரனாகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள். (ஆதி 35:28,29)


நம்முடைய வாழ்க்கையில் குறிக்கப்பட்ட திட்டங்கள் மாத்திரமல்ல, நம்மைக் கொண்டு மற்றவர்களுடைய வாழ்க்கையில் குறிக்கப்பட்ட திட்டங்களும் நிறைவேறவேண்டும்.  நம்முடைய வாழ்க்கையில் நிறைவேறிவிட்ட காரியங்களை நினைத்து நிம்மதிப் பெருமூச்சு விடும் அதே நேரத்தில், நம்மைக் கொண்டு அடுத்தவருடைய வாழ்க்கையில் நிறைவேற்றப்படாமல், நிர்விசாரமாக நாம் விட்டுவிட்ட அநேக காரியங்களைக் குறித்து பரலோகம் பரிதபித்துவிடக்கூடாது. சுயத்தையே சுமந்துகொண்டிருக்கும் மனிதர்களின் மனம், பிறரைச் சுமப்பது கடினமே. வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில்கூட, நாம் எட்டிப்பிடிக்கவேண்டிய காரியங்கள் அநேகம் இருக்கக்கூடும்; எனினும், கைநீட்டிப் பறிக்கும் தூரத்திலேயே அவைகள் இருந்தும், கண்ணுக்கு அவைகள் தெரியாததைப் போல, கரங்களை முடக்கிக்கொண்டு அமர்ந்துவிட்டால்,  கூடையில் சேரவேண்டியவைகளும், கூளமாகப்போய்விடக்கூடுமே. உலகம் வழியனுப்பும் நேரத்திலும், பரலோகத்pதற்காக நாம் சிலரை வாரிக்கொள்ள முடியும்.

ஈசாக்கினுடைய வாழ்க்கையில், நிறைவேற்றப்படவேண்டிய காரியங்கள் அநேகமிருந்தபோதிலும், வாழ்க்கை நிறைவுக்கு வந்துவிட்டதைப் போன்றே உணருகின்றான். ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான். அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன். ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி,  அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்கிறான். (ஆதி 27:1-4) 

சரீரத்தில் பெலவீனம் உண்டாகிவிட்டதும், மரணத்தை பார்க்கத் தொடங்விட்டான் ஈசாக்கு. வாழ்க்கையின் மறுபுறம் அவனது கண்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டது. வாழ்க்கையின் இறுதிநாட்களில், சரீரத்தின் சுவைக்கே முன்னுரிமை கொடுத்தான் ஈசாக்கு. விரும்பினதைச் சுவைக்க வாயும், அதை ஏற்றுக்கொள்ளவும் ஜீரணிக்கவும் வயிறும் வேட்கையாயிருந்தன; ஆனாலும், கண்கள் இருளடைந்துவிட்டதினால், உலகமே ஈசாக்கிற்கு இருண்டதாயிற்று. தூரத்திலிருக்கும் மரணத்தையும், அருகில் இருப்பதைப் போன்றே உணருகின்றான். அவனது உள்ளத்தின் உணர்வினையே அருகிலிருப்போரிடத்திலும் உதடுகளால் உச்சரிக்கின்றான். 

'மரணத்திற்கு முன் தனது விருப்பத்தை நிறைவேற்றவே ஆசையாயிருந்தான் ஈசாக்கு.' எனினும், கல்லறைக்கு முன் தன் கடைசி ஆசையை நிறைவேற்றுவதுபோலவே அவனது வார்த்தைகள் வெளிவருகின்றன. முதலாவது, 'சுவையான உணவே அவனது மரணத்திற்கு முன்னான இறுதி ஆசையாயிருந்தது.' இரண்டாவதாக, 'சுவையான உணவை யார் கொடுக்கிறாரோ அவர்களை ஆசீர்வதிக்கவேண்டும் என்ற விருப்பம்தான் ஈசாக்கினிடத்தில் மேலோங்கியிருந்தது.' ருசியான உணவைக் கொடுத்ததினாலேயே அவன் ஏசாவை ஆசீர்வதிக்க நினைத்தான். உணவிற்காக் ஒருபுறமாகச் சாய்ந்திருந்தான் ஈசாக்கு. இறுதியிலோ, விருப்பத்திலேயே விழுந்துபோனான்.

சுவையானதைக் கொடுத்தால் ஆசீர்வாதம் என்ற ஈசாக்கின் சூத்திரப்படி, யாக்கோபை அவன் ஆசீர்வதித்தது ஒருபுறத்தில் சரியே; என்றாலும், ஏசாவுக்கு வாக்குக் கொடுத்ததினாலே, யாக்கோபு ஏமாற்றிவிட்டதாக நினைத்தான் (ஆதி. 27:35). எனவே, யாக்கோபையும் ஈசாக்கு மனதார நேசிக்கவேண்டியதிருந்தது. விருப்பமான வேட்டைக்கறியைக் கொடுத்துக்கொண்டிருந்த ஏசா, ஈசாக்கின் இறுதி நாட்களில் தகப்பனை விட்டு விலகி ஏதோமில் தூரமாகவே வாழ்ந்துகொண்டிருந்தான். தகப்பனாகிய ஈசாக்கு மரணத்தருவாயில் இருந்தபோது, ஏசா வந்து பார்த்திருந்திருக்கக்கூடும்; தகப்பனது மரணத்தின்போது ஏசா யாக்கோபோடு கூட இருந்தான் (ஆதி. 35:29); எனினும், தகப்பன் மீதான பாசத்தினால் அல்ல; தனக்குரிய பாகத்தை பெற்றுக்கொள்வதற்காகவே என்பதே வரலாறு. ஆனால், யாக்கோபோ பாசத்தைப் பெற்றுக்கொள்ள திரும்பி வந்தான். நாம் பிதாவிடம் வருவது எதற்காக? பாசத்திற்காகவா அல்லது பாகத்திற்காகவா? நம்முடைய மரணத்திற்கு முன் நாம் பிதாவினிடத்தில் தேடுவது 'அப்பா' என்ற பாசத்தையா? 'ஆசீர்வாதம்' என்ற பாகத்தையா? 

 

துர்ச்செய்தியும், நற்செய்தியும் (ஆதி 35:21,22)

 துர்ச்செய்தியும், நற்செய்தியும்



இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்துக்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான். இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான். அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான். (ஆதி 35:21,22)


ஆல்போல் வளர்ந்தாலும், ஆணிவேரை மாத்திரம் தன் கைகளில் வைத்துக்கொள்ள விரும்புபவன் சத்துரு. யூதேயாவின் கடையாந்தர தென்கோடியில், ஏதோமின் எல்லையில் உள்ள ஓர் பட்டணம் ஏதேர் (யோசுவா 15:21). 'மந்தையின் துருக்கம்' (மீகா 4:8) என்றும் ஆங்கிலத்தில் 'வழறநச ழக வாந கடழஉம' என்று அழைக்கப்பட்டது. மந்தையை மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு, மேடான, கோபுரம் போன்ற ஓர் பகுதியிலிருந்து ஆடுகளைக் கண்காணித்துக்கொண்டிருப்பது மேய்ப்பர்களின் அக்காலத்து வழக்கமாயிருந்தது. லாபானுடைய வீட்டிலிருந்து தகப்பனாகிய ஈசாக்கின் வீட்டை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இஸ்ரவேலும், மேய்ச்சல் நிறைந்த அந்த இடத்திற்கு அருகில் வந்தபோது, தன்னுடைய மந்தையை மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு சற்று தங்கி தாபரித்திருக்கக்கூடும். எனினும், ஏதேர் என்கிற கோபுரத்துக்கு அப்புறத்தில் கூடாரம் அமைத்து தங்கிக் குடியிருக்கும்போது, லேயாளுக்குப் பிறந்த இஸ்ரவேலின் மூத்தகுமாரனான ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான். அந்த துர்ச்செய்தி தகப்பனான இஸ்ரவேலின் காதுகளை வந்து எட்டியது (ஆதி 35:22). சேஷ;டபுத்திர சுதந்திரத்திற்குப் பாத்திரவானாக ரூபன் பிறந்திருந்தபோதிலும், இந்த செயல் அவனுடைய வாழ்க்கையை நஷ;டப்படுத்திவிட்டதே.  

சகோதரர்கள் யோசேப்பை வெறுத்து, நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றில் அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்று சொல்லிக்கொண்டபோது, ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய்,  அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தவன் (ஆதி 37:20-22). பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குப் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் சகோதரரிடத்துக்குத் திரும்பி வந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்று அங்கலாய்த்தவன் (ஆதி 37:29,30). சகோதரர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று சொன்னவன் (ஆதி 42:22). பஞ்சத்தின் நாட்களில், எகிப்திற்கு தானியம் கொள்ளச் சென்றபோது, ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டு வருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று உறுதியளித்தவன் (ஆதி 42:37). என்றபோதிலும், மறுமனையாட்டியுடன் ரூபன் சயனித்ததை மனதிலேயே வைத்திருந்த தகப்பன், 'ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே' (ஆதி 49:3,4) என்று சபித்துவிட்டானே. எத்தனை நல்ல குணங்களும்;, வல்லமையும் காணப்பட்டபோதிலும், 'பாலுறவில் இருந்த பலவீனம்' அவனை படுகுழிக்குள் தள்ளிவிட்டதே. 

என்றபோதிலும், துர்ச்செய்தி இஸ்ரவேலின் காதுகளை வந்தெட்டிய 'மந்தையின் துருக்கம்' என்றுமிடத்திலேயே பிரதான மேய்ப்பரான இயேசு கிறிஸ்து பிறந்த நற்செய்தி மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது (லூக். 2:10). உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தபோது, யோசேப்பு தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனபோது (லூக். 2:1,4,5). அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள் (லூக் 2:8) என்ற இடம் இதுவே என்று வேதபண்டிதர்களால் கணிக்கப்படுகின்றது. 

அடக்கமும், தொடக்கமும் (ஆதி. 35:19,20)

 அடக்கமும், தொடக்கமும்



ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள். அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண். (ஆதி. 35:19,20)


மனிதன் ஒருவேளை தோற்றுப்போனாலும், பிசாசுக்கு எதிரான போரில் தொடர்ந்து முன்னேறுகிறவர் பிதா. யாக்கோபின் மனைவியாகிய ராகேல் விக்கிரகத்தோடு வாழ்ந்துகொண்டிருந்தவள். தகப்பனுடைய சுரூபங்களையே திருடிக்கொண்டுவந்தவள் (ஆதி. 31:19). லாபான் யாக்கோபை தேடிவந்தபோது, யாக்கோபை நோக்கி: இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்றே கேட்டான் (ஆதி. 31:30) என்றும், ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள் (ஆதி. 31:34) என்றும், தகப்பன் தேடிவந்தபோது, அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக் குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை (ஆதி. 31:35) என்றும் எழுதப்பட்டுள்ள வசனங்கள், திருடப்பட்டவைகள் ஒரு சுரூபம் அல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட சுரூபங்கள் என்பதை நமக்கு வெளிப்படுத்துகின்றனவே.

ராகேல் பிள்ளையில்லாதிருந்தபோது, தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள் (ஆதி. 30:22-24). 'ராகேலை நினைத்தருளி,  கர்ப்பந்தரிக்கும்படிச் செய்து, நிந்தையை நீக்கியது தேவனே' என்றபோதிலும், தன் தகப்பனுடைய வீட்டை விட்டுப் புறப்பட்டுச் செல்லும்போதோ, தன் தகப்பனுடைய தெய்வங்களைத் திருடிக்கொண்டு செல்கிறாள். 

திருடிக்கொண்டு செல்வது மாத்திரமல்ல, தகப்பனிடமிருந்து அவைகளை மறைத்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில், ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்ததினால் (ஆதி 31:34), கர்த்தர் ஆசீர்வதித்த கர்ப்பத்தின் வாசலில், மீண்டும் சுரூபங்களைக் கொண்டுவந்து வைத்துவிட்டாளே; விளைவு வாழ்க்கையையே இழக்கும் நிலை உண்டாகிவிட்டது. கர்ப்பத்தின் வாசலிலிருந்து அடுத்த குமாரன் வெளிப்படும்போது, கல்லறைக்குச் சென்றுவிட்டாயே (ஆதி. 35:19). இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றே சொன்னாள் ராகேல் (ஆதி 30:24); ஆனால், அந்நிய தெய்வங்களையும் உடன் எடுத்துக்கொண்டாளே. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டபின் அந்நிய தெய்வங்களுக்கு இடங்கொடுத்தால் நம்முடைய வாழ்க்கையும் சின்னாபின்னமாகிவிடும். வீடு, தொழில் போன்றவைகள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்க, அவைகளின் வாசல்களில் அருவருப்புகளை கொண்டுவந்து வைத்தால், அது, 'நம்மை நாமே அடக்கம்பண்ணிவிடுவதற்கே சமமாகிவிடும்.' 

ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள் (ஆதி 35:19). ராகேல் அடக்கம்பண்ணப்பட்ட ஊரிலேயே இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பது எத்தனை ஆச்சரியமானது. எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது (மீகா 5:2) என்று தீர்க்கதரிசி உரைத்தானே. யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே,யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்களே (மத் 2:6). விக்கிரகத்தைச் சுமப்பதினால் வரும் மரணத்திலிருந்து நம்மை தடுப்தற்கே, மரணத்திற்கான தூண் நிறுத்தப்பட்ட ஊரிலிருந்து (ஆதி. 35:20), மறுவாழ்விற்கான பயணத்தைத் தொடங்கினார் இயேசு கிறிஸ்து. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் (ஆதி 3:15) என்றார் ஆண்டவர். 'பெண்ணுக்கும் பிசாசுக்கும் நடந்த யுத்தத்தில் யுத்தத்தில் விழுந்துபோனாள் ராகேல்; ஏவாளும் அப்படியே; ஆனால், வித்துக்கும், வித்துக்கும் உண்டான யுத்தமோ சத்துருவின் தலையை நசுக்கினது.' 


பெத்தேல், ஏல்பெத்தேல் (ஆதி 35:7)

 பெத்தேல், ஏல்பெத்தேல்



அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான். (ஆதி 35:7)


தற்காப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் மாத்திரமே தேவனைப் பயன்படுத்திவிட்டு, தூரமாகப் பயணித்துவிடும் மனிதர்கள் அநேகர். ஆபத்து நேரிடும்போது, அவரது செட்டைகளின் நிழலைத் தேடுவதும், ஆபத்து நீங்கியதும் செட்டைகளை விட்டு சிதறிஓடிவிடுவதும், வாழ்க்கையில் வருத்தங்கள் வரும்போது தேவனுடைய வீட்டைத் தேடிவருவருவதும், வருத்தங்கள் நீங்கியதும் விலகிச் சென்றுவிடுவதுமே இவர்களது வழக்கமாயிருக்கும். ஆண்டவரை ஆராதிக்கும்படியாகக் கட்டப்பட்ட ஆலயங்களைக் கூட அடைக்கலப்பட்டணங்களாகவே பயன்படுத்திக்கொண்டிருக்கும் குணமே இவர்களில் குடிகொண்டிருக்கும். உலக வாழ்க்கைக்காகவே உன்னதத்தை தினம் தினம் நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கும் மனம் கொண்டவர்கள் இவர்கள். மேலும், தங்களருகிலே, தங்களுக்குள்ளே தங்களை எரியச் செய்யும் எண்ணெயாக அல்ல; தங்களுக்கு வெளியே, தங்களைப் பாதுகாக்கும்படியாகவே ஆண்டவரை நிறுத்தியிருப்பார்கள். பாதுகாப்பு மாத்திரமல்ல, பரிசுத்தமே வாழ்க்கையில் பிரதானமானது. எனவே, யாக்கோபின் வாழ்க்கையில் காணப்பட்ட 'பெத்தேல்' அனுபவமும் 'ஏல்பெத்தேல்' அனுபவமும் நம்முடைய வாழ்க்கையிலும் காணப்படவேண்டியது அவசியம். 

இயேசு கிறிஸ்து போதித்த 'ஓர் ஒரு தகப்பன் மற்றும் இரண்டு குமாரர்கள்' என்னும் உவமையை, யாக்கோபின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மையான நிகழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால் பல சத்தியங்களை நாம் புரிந்துகொள்ள முடியும். தகப்பனிடத்திலிருந்து தனக்குரிய பங்கை பெற்றுக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிச் சென்றான் இளையகுமாரன் (லூக். 15:12); ஆனால், யாக்கோபோ, தகப்பனிடத்திலிருந்து அண்ணனுடைய ஆசீர்வாதத்தை வார்த்தைகளால் ஏமாற்றிப் பெற்றுக்கொண்டு, வெறுங்கையனாகவே வீட்டைவிட்டு வெளியேறினான் (ஆதி. 27:19; தப்பிச் செல்லும் அவசரத்தில், தன்னுடைய பங்கைக்கூட தகப்பனுடைய வீட்டிலேயே விட்டுச்செல்லும் நிலைதான் யாக்கோபுக்கு உண்டானது. தனக்குரிய பங்கைப் பெற்றுக்கொண்டு வெளியேறிச் சென்ற இளையகுமாரன், திரும்பி வரும்போதா வெறுங்கையாகவே வந்தான் (லூக். 15:16,22). ஆனால், வெறுங்கையனாக வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்ற யாக்கோபு இரண்டு பரிவாரங்களோடு திரும்பி வந்துகொண்டிருந்தான் (ஆதி. 32:10). இளைய குமாரன் தவறான பாதையில் பயணித்து, துன்மார்க்கமான மார்க்கத்தில் சஞ்சரித்து, துன்மார்க்கமான நண்பர்களோடு தான் பெற்ற ஆஸ்திகளை அழித்துப்போட்டான் (லூக். 15:13); ஆனால், யாக்கோபோ துன்மார்க்கத்திற்குத் தன்னை விற்றுப்போடாமல், தேவனுக்கும் தனக்கும் இடையிலான தொடர்பிலிருந்து தன்னைத் துண்டித்துவிடாமல், தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்தான். எனவே, லாபானால் யாக்கோபை வெறுமைப்படுத்த இயலவில்லை (ஆதி. 31:42). 

நம்முடைய வாழ்க்கையிலும், வெறுங்கையர்களாக நாம் இருப்போமென்றாலும், தேவன் நம்மோடு கூட இருப்பாரென்றால் நாம் ஐசுவரியவான்களே, பரலோகம் நம்மைப் பார்த்துக்கொண்டேயிருக்கும், பிதா நமது தேவைகளைச் சந்தித்துக்கொண்டேயிருப்பார்; அன்றன்றுள்ள அப்பம் நமக்குக் குறைவின்றி அவரிடத்திலிருந்து கிடைத்துக்கொண்டேயிருக்கும். மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் (சங் 118:8) என்ற வசனத்தின் விளக்கம் வாழ்க்கையின் விளக்காய் எரியும். உலகப்பிரகாரமான தகப்பனிடத்திலிருந்து யாக்கோபு பிரிந்துசென்றாலும், பரலோகப் பிதாவினிடத்திலிருந்து அவனது வாழ்க்கை பிரிந்திருக்கவில்லை. தகப்பனுடைய வீட்டிலிருந்து யாக்கோபு விலகிச் சென்றிருந்தபோதிலும், 'தேவனுடைய வீடு' அவன் கூடவே சென்றுகொண்டிருந்தது. 

தகப்பனோடுகூட இளையகுமாரன் வீட்டில் இருந்தபோது, இளையகுமாரனுக்கும் அண்ணனுக்கும் அதிலே பங்கு இருந்தாலும், தகப்பனும் உடனிருந்ததினால், அந்த வீடு தகப்பனுடையதாகவே கருதப்பட்டது. இதுவே 'பெத்தேல்' அனுபவம்; ஆனால், இளையகுமாரன் திரும்பிவரும்போதோ, அதாவது தன்னுடைய ஆஸ்திகள் அனைத்தையும் அழித்துpவிட்டு, தகப்பனுடைய வீட்டில் தனக்குரியவைகள் எதுவும் இல்லாத நிலையில் வந்தபோதோ, இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று (லூக் 15:19) சொல்லும் எண்ணத்துடனேயே வந்துகொண்டிருக்கின்றான். இளையகுமாரனுக்கென்று, தகப்பனுடைய வீட்டில் பங்கு எதுவும் இல்லை; எல்லாவற்றையும் ஏற்கனவே வாங்கிக்கொண்டான். எனவே, மீதமிருப்பது 'தகப்பனுடையது மாத்திரமே' என்ற எண்ணத்துடனேயே இளையகுமாரன் வருகிறான். இதுவே 'ஏல்பெத்தேல்' அனுபவம். 

ஆனால், யாக்கோபினுடைய வாழ்க்கையோ வித்தியாசமானது. தகப்பனுடைய வீட்டை விட்டு வெளியேறி, மாமனாகிய லாபானுயை வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றபோது, வெறுங்கையனாகவே சென்றான்; அவனிடத்தில் எதுவுமில்லை; அப்படிப்பட்ட சூழ்நிலையிலேயே தேவன் யாக்கோபைச் சந்தித்தார்; 'யாக்கோபினிடத்தில் ஒன்றுமில்லை; தேவனே எல்லாம்' என்பதை வெளிக்காட்டும்படியான, உணர்த்துவிக்கும்படியான சந்திப்பு அது. பயப்படாதே, உன்னுடைய கைகளில் ஒன்றுமில்லாவிட்டாலும், உன்னை ஆசீர்வதிக்கும்படியாக நான் உடனிருக்கிறேன் என்பதைக் கூறும் சந்திப்பு அது; இது யாக்கோபின் வாழ்க்கையின் 'பெத்தேல்' அனுபவம். நம்முடைய வாழ்க்கையிலும், 'பெற்றுக்கொண்டால் மாத்திரமே' அது பெத்தேல் என்று நினைத்துக்கொண்டிருக்கும் ஜனங்கள் உண்டு. எனினும், ஒன்றுமில்லாத நேரத்திலும் அவர் உடனிருப்பதே 'பெத்தேல்' என்ற அனுவமே மேலானது. 

ஆனால்;, மூத்த குமாரனுடைய மனநிலையோ மாறாக இருந்தது. இளையகுமாரன் தன்னுடைய பங்கை வாங்கி செலவழித்துவிட்டான்; எனவே எஞ்சியிருப்பது 'என்னுடைய பங்கு' மாத்திரமே என்றே நினைத்துக்கொண்டிருந்தான் மூத்த குமாரன். என்றாலும், தகப்பனோ அதனை மூத்த குமாரனுடைய பங்காகக் கருதவில்லை; மாறாக, தன்னுடைய ஆஸ்தியாகவே கருதுகின்றார். எனவே, மூத்த குமாரனை நோக்கி:  மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது (லூக் 15:31) என்று சொல்லுகின்றார். நாம் தகப்பனோடுகூட இருப்போமென்றால், நமக்குரியவைகளாக இருந்தாலும், அவைகள் அனைத்தும் அவருக்குரியவைகளாகவே கணக்கில் கொள்ளப்படும். என்னுடையது என்று எதுவுமில்லை; எல்லாம் உம்முடையது என்பதே 'ஏல்பெத்தேல்' அனுபவம். 

ஆனால், மூத்த குமாரனோ, 'தனக்குரியவைகள் தான், தகப்பனிடத்திலிருக்கிறது' என்று தவறாக நினைத்துக்கொண்டிருந்தான். இளையகுமாரன் ஆஸ்தியைப் பங்கிட்டுப் பெற்றுச்சென்றபோது, எஞ்சியிருக்கும் அத்தனையும் தன்னுடையதுதான் என்று மூத்தகுமாரன் எண்ணிவிட்டான். அதுவே அவனது மனவருத்தத்திற்குக் காரமாயிருந்தது. 'அனைத்தும் கிறிஸ்துவுக்கே' என்று பாடினாலும், இன்றும், இப்படிப்பட்ட எண்ணம் நம்மிடத்திலிருக்குமென்றால், நம்முடையதிலிருந்து ஆண்டவரே எடுத்துக்கொடுக்கும்போது, நாம் வருத்தத்துடன் வீட்டிற்கு வெளியேதான் நின்றுகொண்டிருப்போம்.  நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை (யாக் 1:17); அவரிடத்திலிருந்தே நமக்கு வருகிறது என்பதை புரிந்துகொள்ளுவோமென்றால், மூத்த குமாரனாயிருந்தாலும் நம்முடைய புத்தி தெளிந்துவிடும். அதிக தாலந்தைக் கொடுப்பதும் (மத். 25:15),மமான சம்பளத்தைக் கொடுப்பதும் அவரது உரிமையே; ஏனெனில், அனைத்தும் அவருடையதே. 

கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் (ஆதி 31:3) என்றே கூறினார்; என்றபோதிலும், அதனைத் தொடர்ந்து, தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு (ஆதி 35:1) என்று கூறுகின்றார். 'உன் பிதாக்களுடைய தேச்திற்கும், உன் இனத்தாரிடத்திற்கும் திரும்பிப்போ' என்று சொன்னவர், 'நீ பெத்தேலுக்குப் போ' என்று கூறுவதின் நோக்கம் என்ன? ஒருமுறை பெத்தேலிலே காப்பாற்றப்பட்டிருந்தாலும், திரும்பி வந்துகொண்டிருக்கும்போதோ, தேவனுக்குப் பிரியமில்லாதவைகள் யாக்கோபின் பரிவாரத்திற்குள் காணப்பட்டனவே. அதை சுத்திகரித்துவிட்டுச் செல்லவே 'பெத்தேலுக்கு' போகச்சொன்னார் தேவன். போகும்போது மாத்திரமல்ல, திரும்பி வரும்போதும் 'பெத்தேலுக்கு' போய்விட்டு வீட்டிற்குப் போனால், தேவையற்றவைகள் நமது வீட்டிற்குள் நுழையாது. தப்பி ஓடினபோது 'பெத்தேல்' (வுhந ர்ழரளந ழக புழன) என்று பெயரிட்ட யாக்கோபு; திரும்பி வரும்போதோ 'ஏல்பெத்தேல்' (வுhந புழன ழக வாந ர்ழரளந ழக புழன) என்று பெயரிடுகின்றான். தேவன் தன்னை சந்தித்ததை நினைவுகூர்ந்து, தன்னைச் சுத்திகரித்துக்கொள்வதே 'ஏல்பெத்தேல்'


இஸ்ரவேல் இரண்டு அர்த்தங்கள் (ஆதி 32:22)

 இஸ்ரவேல் இரண்டு அர்த்தங்கள்



கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவது மாத்திரமல்ல; கிறிஸ்துவை எதற்காக உபயோகித்துக்கொண்டிருக்கிறோம் என்பது முக்கியமானது. லாபானுடைய வீட்டிலிருந்து யாக்கோபு புறப்பட்டபோது, இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான் (ஆதி 32:22). எல்லாரையும் ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தும்வரை அவனும் உடன்சென்றான்; எனினும், அக்கரையிலிருந்து அவர்களை தொடர்ந்து பயணிக்கும்படி அனுப்பிவிட்டபோது, யாக்கோபோ பிந்தித் தனித்திருந்தான். ஆசீர்வாதத்திற்காக தொடைச்சந்து சுளுக்கும்வரை (ஆதி. 32:25) ஆண்டவரோடு போராடிக்கொண்டிருந்தான் யாக்கோபு. அப்போதைய சூழ்நிலையில், ஆசீர்வாதத்திற்காக மாத்திரமே யாக்கோபு தன்னைச் சார்ந்திருப்பதை அறிந்த ஆண்டவர், 'நான் போகட்டும்' (ஆதி. 32:26) என்றார். எனினும், 'நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்' என்று யாக்கோபு சொன்னபோது, அவனது பெயரைக் கேட்ட தேவன், 'இனி உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே' என்றார் (ஆதி 32:28). ஆசீர்வாதத்திற்காகவே ஏசாவினிடத்திலும் போராடி மேற்கொண்டான்; அவ்வாறே, ஆசீர்வாதத்திற்காகவே தேவனிடத்திலும் போராடி மேற்கொண்டவன் யாக்கோபு.  

யாப்போக்கு ஆற்றின் அருகிலேயே யாக்கோபின் பெயர் 'இஸ்ரவேல்' என்று மாற்றப்பட்டுவிட்டது (ஆதி. 32:28); எனினும், யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து: இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு மீண்டும் இஸ்ரவேல் என்று பேரிடுவதின் (ஆதி 35:10) நோக்கம் என்ன? அர்த்தம் என்ன? தொடர்ந்து வரும் வசனங்கள் அதற்கான விளக்கங்களை நமக்குப் போதிக்கின்றனவே. 

பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிடத்திலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள். நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி, தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார் (ஆதி 35:11-13). இந்த சந்திப்பின்போது, யாக்கோபு தேவனை போகவிடாமல் பிடித்துவைத்திருக்கவில்லை. எனினும், 'இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும்' என்று மீண்டும் ஒருமுறை ஆண்டவர் அவனிடம் அறிவிப்பதன் நோக்கம், 'இஸ்ரவேல் என்னும் பெயர் ஆசீர்வாதத்திற்கானது அல்ல; மாறாக, நீ பலுகிப் பெருகுவதற்காகவே' என்பதை யாக்கோபுக்கு உணர்த்துவிப்பதற்காகவே. 

இன்றும், அநேக கிறிஸ்தவர்கள் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து அழைத்துவரப்பட்டு, ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்பட்டாலும், அனுதின வாழ்க்கையிலோ முதல் தரமான இஸ்ரவேலர்களாகவே முடங்கியிருக்கின்றனர். தேவனை வழிமறித்து, எப்படியாகிலும்  வாழ்க்கைக்குத் தேவையான ஆசீர்வாதங்களை பரத்திலிருந்தும், அவரது கரங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும், 'ஆசீர்வாதங்களுக்காக மாத்திரமே அவரைப் பின்பற்றுகிறவர்களாகவுமே' தங்கள் பயணத்தை அவர்கள் மாற்றிவிட்டனர். தாங்கள் இஸ்ரவேலர்களாக மாறினது, 'தேவனோடு போராடி பெற்றுக்கொள்வதற்காகவே' என்ற தவறான திசையிலேயே தினம் தினம் அவர்கள் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். அநேக ஊழியர்களும்கூட ஆசீர்வாதத்திற்காகப் போராடும்படியாகவே ஆத்துமாக்களைத் தூண்டிவிடுகின்றனர். இத்தகையோரின் ஆத்துமதாகம் ஆசீர்வாதங்களோடு நின்றுபோய்விட்டது. சரீரத்தை அவரது சமுகத்தில் வற்புறுத்தியாகிலும், சரீரத்திற்கானவைகளையே பெற்றுக்கொள்ளவேண்டும் என்றே ஆண்டவரோடு தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்றனர். 'உபவாசம்' என்ற பெயரில் ஜெபித்தாலும், உண்மையிலோ, 'பெற்றுக்கொள்வதே  வாழ்க்கையில் பிரதானமாகிவிட்டது.' ஆத்துமாக்கள் அவருடையதாகவேண்டும்; தேவனுடைய சந்ததி பெருகவேண்டும்; 'பலுகிப் பெருகுங்கள்' என்ற வார்த்தை விசுவாசிகளால் நிறைவேறவேண்டும்; 'இஸ்ரவேலர்' என்று இன்று நாம் அழைக்கப்படுவதின் நோக்கம் இதற்காகவே. புரிந்துகொண்டால், ஆசீர்வாதங்களுக்காக ஆண்டவரை மறிப்பதை விட்டுவிட்டு, நரகம் செல்லும் ஆத்துமாக்களை மறித்து நிற்போம்.